×

அதிமுக எம்எல்ஏ மிரட்டல் கதறி அழுத பெண் கமிஷனர்

மேட்டுப்பாளையம்: அதிமுக எம்எல்ஏ மிரட்டியதால் பெண் கமிஷனர் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சி தலைவராக மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி என்பவரும், துணைத்தலைவராக அருள்வடிவு என்பவரும் பதவி வகித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நகராட்சி அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த மேட்டுப்பாளையம் அதிமுக எம்எல்ஏ செல்வராஜ், கமிஷனர் அமுதாவின் அறைக்குச்சென்று அவரிடம் வளர்ச்சிப்பணிகள் குறித்து கேள்வி கேட்டுள்ளார். அப்போது, அவர் கமிஷனரை ஒருமையில் பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கமிஷனர் பயந்து அழுது கொண்டு இருந்தார்.

இந்நிலையில் குடியரசு தினத்தையொட்டி விழாவினை கொண்டாடுவது குறித்து பேசுவதற்காக நகராட்சி தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்டோர் கமிஷனர் அறைக்கு சென்றனர். அப்போது, கமிஷனரை சமாதானப்படுத்தினர். அப்போது, எம்எல்ஏ செல்வராஜ், ‘‘நான் பேசிக்கொண்டிருக்கும்போது நீ எதற்கு உள்ளே வந்தாய்?’’ என ஒருமையில் நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவரை பேசியுள்ளார். இதனை கண்ட திமுக கவுன்சிலர்கள் அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பையும் சமாதானப்படுத்தினார். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பெண் என்றும் பாராமல் ஒருமையில் பேசி மிரட்டிய அதிமுக எம்எல்ஏவால் நகராட்சி கமிஷனர் அழுத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post அதிமுக எம்எல்ஏ மிரட்டல் கதறி அழுத பெண் கமிஷனர் appeared first on Dinakaran.

Tags : AIADMK MLA ,Mettupalayam ,Municipality ,Mehreeba Parveen Ashraf Ali ,Arulwadivu ,president ,
× RELATED நள்ளிரவில் பயங்கரம் வீடு புகுந்து வெல்டரை வெட்டி வெடிகுண்டு வீச்சு